Monday, May 9, 2011

பச்சைக் கொடி

சுட்டெரிக்கும் வெயிலில்
கல் உடைக்கும் குவாரியில்
பொறி தெறிக்க கல் உடைத்து
காய்த்த கரங்கள் எழுதிய தீர்ப்பு.

பகலவன் பார்த்து
கார் கணித்து ஏர் பிடித்து
நிலம் உழுது பயிர் அறுத்து
வயிர் நிரப்பும்
அன்னையின் கரங்கள் எழுதிய தீர்ப்பு!

ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
அனைவரையும் முழு மனிதனாக்கி
அழகு பார்க்க நித்தமும்
தறி அடித்து வலி கொண்ட
கரங்கள் எழுதிய தீர்ப்பு!

அம்மாவோ , அய்யாவோ
சிவப்பைத் தாண்டினால் ரூ.50
என்று பாரபட்சம் இன்றி
எவரிடத்திலும் நீளும்
காவல் கரங்கள்
எழுதிய தீர்ப்பு!

கோடான கோடி
கரங்கள் எழுதிய தீர்ப்பு
இன்று அறிவிக்கப்படும் நாள்!

கரங்கள் எழுதிய தீர்ப்பு
எதுவானாலும் சாதகம் தான்
கரை படிந்த கரங்களுக்கு.

சூரியனோ , இலையோ
பச்சை கொடி தான்
ஊழலுக்கு !

No comments: