Saturday, April 18, 2009

விதியை வென்றேன்

பன்னிரண்டு தேறமாட்டாய்
ஜோசியனின் கணிப்பு .

வியூகங்கள் வகுத்தேன்
விதியை வெல்ல .
அவையும் வென்று வந்தன
நான் பத்து முடிக்கும் வரை.

பத்தில்-
பெண்களே இல்லாத அந்த
வகுப்பில் நான் தான் முதல் மதிப்பெண்

பதினொன்று -
முதல் முறையாக
எனது வகுப்பறையில்
வலப்பக்கம் பெண்கள்

இடது கண் பொறாமை கொண்டது
வலது கண்ணின் மீது
கரும் பலகையைத் தேடினேன்
கருங் கூந்தல்களின் மீது

இப்போது நானே உணர்கிறேன் -
என் அறும்பு மீசையின்
வளர்ச்சி வேகத்தின் அதிகரிப்பையும்

என் குறும்பு பேச்சில் ஒட்டிக்
கொண்ட கரும்புச் சுவையையும்

ஆண்டாண்டு காலமாய் என்னோடிருக்கும்
ஆண்ட்ரோஜன்களின் அட்டகாசத்தையும்

பெண்களின் விழிகளைப் பார்க்க
துவங்கினேன் .

விழிகளின் ஈர்ப்பு விசை அதிகம் தான்
விசை எத்தனை நியூட்டன்கள் ?
கணக்கிட முயன்றேன் .
நியூட்டனாலேயே முடியாது என்று வியந்தேன் .

உன் விழிகள் பர்ர்த்த
அந்த வினாடியில் அவையும்
எனைக் காண்கின்றன என்று அறிந்து
முதன்முதலில் என் கால்கள் விண்ணில் பறந்தன
என் வியூகங்கள் மறந்து போயின
என் வில்லின் நாண்கள் அறுந்து போயின

பன்னிரண்டு ---- தேர்வு முடிவுகள்
வியூகங்கள் மறந்த பின்னும்
நான் முதலிடத்தில்
இப்போது கீழிருந்து மேலாக

இது வரை நான் தோற்கவில்லை என்றிருந்தேன் .

பன்னிரண்டிற்குப் பிறகு
நீ கல்லூரி என்னும்
தோட்டத்தில் மலரானாய்
அங்கே வட்டமடிக்கும்
வண்டுகளுள் ஒன்றுடன்
மணமானாய்

பின்பு இரண்டு வருடங்கள் ----

என் தாடையில் தாடிக்கு இடமளித்தேன் !

கோடையிலும் குளிர் காய்ந்தேன்
கஞ்சா தோட்டத்தின் முன்பு !

இரவில் தினமும் நிலா தேடினேன்
நீரோடையில் நின்று !

போதும் இந்த வறட்சி என்று
ஒரு காகிதம் எடுத்தேன் ----

விதியை வெல்ல நான் வகுத்த வியூகங்களையும் ,
அதனை வென்ற உனது விழிகளையும் ,
உன் விழி சொல்லிய பல கதைகளையும் ,
அதனை மிஞ்ச நான் எழுதிய கவிதைகளையும் ,
என் மீது கோபம் கொள்கையில் உன் விசனத்தையும் ,
எனது கோபத்தை தணித்த உனது விரல்களின் விரசத்தையும் ,
என்னை உலுக்கிய உன் வார்த்தைகளின் விஷத்தையும்

அதில் எழுதி பார்த்தேன்

ஓர் அருமையான திரைக்கதை ரெடி

இப்போது வென்றுவிட்டேன் விதியை

எனது முதல் திரைப்படத்தின்
பெயர் ----விதி

நன்றி -----விதி தாங்கிய விழிக்கு!